Tourist Places Around the World.

Breaking

Tuesday 8 September 2020

சிவனின் பஞ்ச ஆரண்ய தலங்கள் / Shiva Temples - Pancha Aaranya Sthalangal

 

SHIVA TEMPLES - PANCHA AARANYA STHALANGAL

பஞ்ச ஆரண்ய தலங்கள் என்பவை ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டுமுறையில் கலந்து கொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்களாகும். ஒரே நாளில் ஒவ்வொரு வேளை வழிபாட்டின்போதும் பஞ்ச ஆரண்ய தலங்களை தரிசிப்பதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை அடையலாம்.

ஆரண்யம் என்றால் காடு எனப் பொருள்படும். பஞ்ச ஆரண்ய தலங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைக் காடு அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இத்திருத்தலங்களில் விடியற்காலை, காலை, உச்சிவேளை, மாலை, அர்த்தசாமம் என ஐந்து முறை வழிபாடு நடத்தப்படுகிறது.

தஞ்சைக்கு அருகில் அமைந்துள்ள பஞ்ச ஆரண்ய தலங்கள் முறையே

1.  திருகருக்காவூர் – விடியற்காலை  
2.  அவளிவநல்லூர் – காலை  
3.  அரதைபெரும்பாழி – உச்சிவேளை  
4.  ஆலங்குடி – மாலை  
5.  திருக்கொள்ளம்புதூர் – அர்த்தசாமம் 

ஆகியவை ஆகும்.  திருஞானசம்பந்தர் தனது திருதலப் பயணத்தின்போது பஞ்ச ஆரண்ய தலங்களை முறைப்படி வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பஞ்சஆரண்ய தலங்கள் யாவும் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளன.

திருகருக்காவூர் – முல்லைவனம் – விடியற்காலை வழிபாடு  

திருகருக்காவூர்:  

திருகருக்காவூர் தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் முல்லைவனநாதர், அம்மை கர்ப்பகரட்சகி, கருகாத்தநாயகி என்று அழைப்படுகின்றனர். இத்தலமானது உசத் காலம் என்றழைக்கப்படும் (காலை 5.30 முதல் 6 மணி வரை) விடியற்காலை வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் முல்லை வனம் ஆகும்.  

இத்தல இறைவன், விநாயகர், நந்தியெம்பெருமான் ஆகியோர் உளியால் செதுக்கப்படாத சுயம்பு மூர்த்தங்களாவர். ஊர்த்துவ முனிவரின் சாபத்தினால் பாதிக்கப்பட்ட நிருத்துவ முனிவரின் மனைவியான வேதிகை என்ற பெண்ணின் கர்ப்பத்தைக் காத்து அருள்புரிந்தால் அன்னை கருகாத்தநாயகி என்று அழைக்கப்படுகிறார்.  

இங்கு இறைவனுக்கு அபிசேகம் கிடையாது, புனுகு மட்டும் சாத்தப்படுகிறது. இத்தலத்தில் வழிபாடு மேற்கொண்டால் திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் ஆகியவை கிட்டும். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 18வது தலமாகும்.

அவளிவநல்லூர் – பாதிரி வனம் – காலை வழிபாடு  

அவளிவநல்லூர்:  

அவளிவநல்லூர் கும்பகோணத்திலிருந்து 21 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து அம்மாபேட்டை செல்லும் பேருந்துகளும், தஞ்சாவூரிலிருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன.  

இத்தல இறைவன் சாட்சிநாதர் என்றும் அம்மை சௌந்தர்யவல்லி என்று அழைப்படுகின்றனர். இத்தலம் காலை (காலை 8.30 முதல் 9.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் பாதிரி வனம் ஆகும். இத்தலத்தின் அர்ச்சகரின் மூத்த மகளான சுசீலை அம்மைநோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இழந்திருந்தாள். தலயாத்திரிரை சென்று திரும்பிய சுசீலையின் கணவன் அர்ச்சகரின் இளைய மகளை தன் மனைவி என்றான்.  

அர்ச்சகரின் வேண்டுதலை நிறைவேற்ற இறைவன் அம்மையுடன் ரிசப வாகனத்தில் தோன்றி சுசீலையை அவள்தான் இவள் என்று சுசீலையை அவளது கணவனுக்கு அடையாளம் காட்டினார். எனவே இவ்வூர் அவளிவநல்லூர் என்றும், இறைவன் சாட்சிநாதர் என்றும் அழைக்கப்படுகின்றனர். சுசீலையும் இறைவனின் ஆணைப்படி திருக்குளத்தில் நீராடி கண்பார்வையும், அழகும் திரும்பப் பெற்றாள்.  

இத்தல இறைவனை வராக மூர்த்தியும், காசியப்ப முனிவரும் வழிபட்டு பேறு பெற்றனர். இத்தலத்தில் வழிபாடு மேற்கொள்ள குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வர். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 100-வது தலமாகும்.

அரதைபெரும்பாழி – வன்னிவனம் – உச்சிக்கால வழிபாடு  

அரதைபெரும்பாழி:  

அரதைபெரும்பாழி கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்தும், தஞ்சாவூரிலிருந்தும் அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகள் உள்ளன.  

இத்தலத்தில் இறைவன் பாதாளேசுவரர் என்ற திருப்பெயரிலும், அம்மை அலங்காரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர். இத்தலம் உச்சிக்கால (காலை 11 முதல் 12.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் வன்னி வனம் ஆகும். திருமால் மற்றும் பிரம்மாவுக்கு இடையில் யார் பெரியவர் என்ற போட்டியில் திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை தோண்டி சிவனின் திருவடியை காணமுற்பட்டார்.  

அவ்வாறு வாரக அவதாரத்தில் திருமால் தோண்டிய பள்ளம் இத்தலத்தில் இன்றும் காணப்படுகிறது. அரி என்னும் திருமால் பூமியை துவாரம் இட்ட இடம் ஆதலால் இவ்விடம் அரித்துவார மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக திகழ்வதால் இத்தலத்தில் நவகிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. இத்தல இறைவனை வழிபட நவகிரக தோசங்கள் நீங்கும். கடன் தொல்லை ஒழியும்.

ஆலங்குடி – பூளைவனம் – மாலை வழிபாடு

ஆலங்குடி:  

ஆலங்குடி கும்பகோணம் – நீடாமங்கலம் – மன்னார்குடி சாலையில் கும்பகோணத்திலிருந்து தெற்கே 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.  

இங்கு இறைவனார் ஆபத்சகாயேசுவரர், அம்மை ஏலவார் குழலி என்ற பெயர்களில் அருள்புரிகின்றனர். இத்தலம் சாயாரட்சை எனப்படும் மாலை (மாலை 5.30 முதல் 6.00 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இவ்விடம் பூளைவனம் ஆகும். பாற்கடலில் தோன்றிய விசத்தை அருந்தி உலக உயிர்களை காத்த இடம் ஆதலால் இவ்விடம் ஆலங்குடி. இறைவன் ஆபத்சகாயேசுவரர் ஆவார்.  

முசுகுந்த சக்கரவர்த்தி தன் மந்திரியும், சிவபக்தருமான அமுதோகர் என்பவரது சிவபுண்ணியத்தில் பாதியளவை கேட்டு மந்திரி சம்மதிக்காததால் அவரின் தலையைக் கொய்ய உத்தரவிட்டான். மந்திரியின் தலையைக் கொய்தவுடன் அமுதோகர் என்ற சப்தம் இத்தலம் முழுவதும் கேட்டதும் அரசன் தன் தவறுக்கு வருந்தி இத்தல இறைவனை வணங்கி சாப விமேசனம் பெற்றான்.  

அம்மை இவ்விடத்தில் இறைவனை திருமணம் செய்ய தவம் இயற்றி இறைவனை கணவனாகப் பெற்றார். நவகிரக தலங்களில் இவ்விடம் குரு பகவானுக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தல இறைவனை வழிபட கல்வியும் ஞானமும் கிடைக்கும். நல்ல திருமணப்பேறு, புத்திரப்பேறு கிடைக்கும். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 98-வது தலமாகும்.

திருகொள்ளம்புதூர் – வில்வ வனம் – அர்த்தசாம வழிபாடு

திருக்கொள்ளம்புதூர்:  

திருக்கொள்ளம்புதூர் கும்பகோணத்திலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் வில்வவனேசுவரர் அம்பிகை சௌந்தர்ய நாயகி என்று அழைக்கப்படுகின்றனர்.  

இத்தலம் அர்த்தசாமம் எனப்படும் இரவு (மாலை 7.30 முதல் 8.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இவ்விடம் வில்வவனம் ஆகும். திருஞானசம்பந்தர் இத்தல இறைவனை வழிபட வந்தபோது காவிரியின் கிளைநதியான முள்ளியாற்றில் வெள்ளம் பெருகியது. அப்போது சம்பந்தர் இறைவனை நினைத்து பதிகம் பாட ஓடம் தானாகவே ஓடி மறுகரையை அடைந்தது என்பது வரலாறு.  

விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேசன், இடைக்காடர், பிருகு முனிவர், காசிப முனிவர், கண்வ முனிவர், அகத்திய முனிவர், வசிட்ட முனிவர், வாமதேவர், வரகுணபாண்டியன், கோசெங்கட்சோழன் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டு மேன்மை அடைந்தவர் ஆவர். சித்த பிரமை உள்ளவர்கள், மனகுழப்பத்தில் தவிப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் மனத்தெளிவு பிறக்கும். மனநோய் நீங்கும். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 113-வது தலமாகும்.  

நாமும் பஞ்சஆரண்ய தலங்களில் வழிபாடு மேற்கொண்டு நன்னிலை அடைவோம்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


கோவில்கள் வரலாறு , இந்திய கோவில்கள் , கோவில்களின் மர்மங்கள் , சிறப்பு வாய்ந்த கோவில்கள் , பரிகார கோயில்கள் , பரிகார கோவில்கள் , பிரசித்தி பெற்ற ஆலயங்கள் , temples in india , famous temples in india , oldest temples in india , must visit temples in india , famous shivan temples in india ,

famous shivan temples in tamilnadu , தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் , தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில் , தமிழ்நாட்டில் உள்ள  புகழ்பெற்ற கோவில்கள் , temples in tamilnadu ,  tamilnadu temple tour , oldest temple in tamilnadu ,must visit temples in tamilnadu , must visit temples in south india , south india temple tour , 

No comments:

Post a Comment