Tourist Places Around the World.

Breaking

Thursday 7 January 2021

சுரைக்காய் சித்தர் / Surakkai Siddhar

 

சுரைக்காய் சித்தர்

SURAKKAI SIDDHAR

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்

சித்தர் என்போர் யாவர் என்ற கேள்விக்கு சித்து ஆற்றல் பெற்றோர் எனவும், சித்தி பெற்றோர் எனவும், இயற்கை ஆற்றல் பெற்றோர் எனவும், சித் என்றால் அறிவு ஆதலால் அறிஞர் எனவும் பலரும் பலவாறாக விளக்கம் தருகின்றனர். ஆனால் சித்தர்கள் இப்படிப்பட்டவர் என வரையறுப்பதோ, அடையாளப்படுத்துவதோ மிகக் கடினம்.

‘பேறாம் பிரமானந்த மடைந்தோன் சித்தன்’ என்பார் கோரக்கர்.     

பந்தங் கடந்தவனே சித்தன் – பாரில்     

பஞ்சமா பாதகத்தை விட்டோனே பத்தன்     

இந்த விதஞ் தெரிந்தவனே சித்தன்     

அதிலென் நிலைமை கண்டவனே சீவமுத்தன் என்கிறார் கல்லுளிச் சித்தர்.


சித்தர்கள் குறிப்பிட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் எனச் சொல்வதற்கு இல்லாமல் எல்லாக் காலத்திலும் வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்கள் காயகல்பம், மருத்துவம், கணிதம், இதள் மாற்றியம் (இரசவாதம்), மெய்யியல், ஆன்மீகம், கணியம் (சோதிடம்) என பல துறைகளில் வல்லவர்களாக இருந்துள்ளனர்.


சித்தர்கள் நினைத்ததை நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்க நிறைமாந்தர் எனப்படுகின்றனர். தமிழகத்தின் நெடிய வரலாற்றில் புகழ்மிக்க பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு சித்தர்நாடு என்றே கூட  ஒரு பெயர் உண்டு. இவர்களில் சிலரைப் பற்றியாவது நாம் அறிந்துகொள்ளல் வேண்டும். அந்த வகையில் மிக அண்மையில் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்து 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கதில் வாழ்வு நீத்தவரான ஒரு பெரும் பெரியார் (மகான்) தான் சுரைக்காய் சித்தர் என்பவர். அவரைப் பற்றிய வரலாற்றையே இம்முழுக் கட்டுரையும் விளக்குவது.


சுரைக்காய் சித்தரோடு உடனிருந்து அனுபவம் பெற்ற 75 அகவையாளர் திரு. செங்கல்வராய முதலியாரின் அனுபவங்கள் முதல் பகுதியாகவும், சுரைக்காய் சித்தரை சந்தித்து அருள் பெற்ற அவரது பக்தர்கள் சிலரது அனுபவப் பதிவுகள் இரண்டாம் பகுதியாகவும் இடம் பெறும்படியாக ஒரு நூலை தெலுங்குல் எழுதி முதன்முதலாக திரு. R. கிருஷ்ணசாமி நாயுடு B.A. 1911 இல் வெளியிட்டார். பின்பு இந்நூலை திரு. N . ராஜு நாயுடு MBPI தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். அந்த ஆங்கில நூலை ‘சுரைக்காய் சுவாமிகள் வரலாறு – அற்புதச் செயல்கள் வருமுன்னுரைத்தல்’ என்ற தலைப்பில் திரு. தி. பக்தவத்சலம் பிள்ளை B.A. தமிழில் மொழிபெயர்த்து 1929 இல் வெளியான நூலை மேற்கோளாகக்  கொண்டு சுறுக்கமாக எழுதப்பட்டது இக்கட்டுரை.


தமிழ்நாட்டின் வடக்கே திருத்தணிக்கும் திருப்பதிக்கும் இடையில் அமைந்த புத்தூருக்குக் கிழக்கே  4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் ஒரு சிறிய ஊர்தான் நாராயணவரம் அல்லது நாராயணவனம் என்பது. தம் இறுதிக் காலத்தே இங்கு தங்கி வாழ்ந்தவர் தாம் சுரைக்காய்ச் சித்தர் என்னும் தவப்பெரியார். நூலில் இவர் பெயர் சுரைக்காய் இராமசாமி என்று பதிவாகி உள்ளது.


இரு பெரிய சுரைக் குடுக்கைகளை இரண்டு ஏனங்களாகப் பயன்படுத்துவதற்காக அவற்றை இவர் எப்போதும் தம்முடனேயே எடுத்துச் சென்றதால் இவர் சுரைக்காய்ச் சித்தர் என்று அடையாளப்படுத்தப்பட்டார். உணவையும் நீரையும் இக்குடுக்கைகளிலேயே இவர் வைத்துக் கொள்வார். இரு நாய்களை கயிறு கட்டி இழுத்துச் செல்வார். பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்த இவருக்கு குடும்பம் என்று ஒன்று இருந்ததாகத தெரியவில்லை.


உருவத்தில் இவர் சற்றே குட்டையானவர், மாநிறத்தவர். கிழிந்த உடையும், பெரிய தலைப்பாகையும் அணிந்திருப்பார். இதுவே இவருடைய அடையாளம். இவர் பேசும் சொற்களிலிருந்து நேரான பொருளை அறிய இயலாது. எதையும் மறைபொருளாகவே பேசுவார். சிலபோது தம்மிடம் வந்து தங்கள் குறைகளைக் கூறுவோருக்கு ஆறுதல் சொல்லுவார்; நோயுற்று நலிந்தவருக்கு நோயைப் போக்கி அருளுவார்; இடருற்றவருக்கு இடர்களைக் களைவார்.


கெடுதிவருமுன்னே குறிப்பாய் எச்சரித்துத் துன்புற வேண்டியவர் நெஞ்சைத் திடப்படுத்துவார். இவர் எப்போது பிறந்தார், எங்கு பிறந்தார் என்று எவராலும் திட்டமாகக் கூற இயலவில்லை. இவர் இடையர் குலத்தில் பிறந்து ஆடுமாடு மேய்க்குங்கால் ஒரு ஓகி(யோகி)யரிடம் ஓகப்பயிற்சி கற்றார் என்பர். இவர் இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து சமாதி அடைந்தார் என்பர் சிலர். இன்னும் சிலர் இவர் திருப்பதிக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து திருவள்ளூரில் ஒரு கையில் கருடனை ஏந்திக் கொண்டு நெடுங்காலம் பிச்சையெடுத்து நாளடைவில் விந்தையான மன ஆற்றலை வளர்த்துக் கொண்டார் என்பர்.


இவற்றுக்கெல்லாம் உறுதியான, கண்கூடான சான்றுகள் ஒன்றுமே  கூட இல்லை. இவரது சமயம் வைணவம் என்றோ சைவம் என்றோ பாகுபடுத்த இயலாது. குறுகிய நெறிகளைப் பின்பற்றும் சமயங்களைக் கடந்து நின்றவர் அவர். சமயக்குறிகளை அணிவது இவர் வழக்கமன்று ஆனால் எவரேனும் திருநீறோ திருமண்ணோ அவர் நெற்றியில் சாற்றினால் அதற்கு அவர் முகஞ்சுளிப்பதில்லை. அவர்கள் மகிழட்டும் என்று அவர் சும்மா இருந்துவிடுவார்.


சித்தர் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிவார் என்பதற்கு ஒரு நிகழ்வு: ஓரிரவு 12.30 மணிக்கு சுரைக்காயார், பாவம்! ஓர் ஏழைப்பெண் இறக்கப் போகிறாள்! குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறாள்! உடனே விரைந்து சென்று அவளைக் காப்பாற்றுங்கள் என்று அழுதுகொண்டே சொன்னார். உடனே அவரது பக்தர்கள் அங்கிருந்த தோட்டத்தின்   தொலைவான மூலையில் இருந்த ஒரு குளத்தில் சென்று தேடியபோது அங்கே எவரும் இருக்கவில்லை.


இதை ஓடிச் சென்று சித்தரிடம் தெரிவித்தபோது தவறான இடத்தில் தேடிப்பார்த்துள்ளீர்கள் என்று கடிந்துகொண்டு அவர்களிடம் தொலைவிலுள்ள குளத்தைப் பற்றிய விவரங்களைக் கூறினார். மறுபடியும் சித்தர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்று தேடியபோது ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியாக குளத்தின் ஆழமான பகுதியில் அந்த நள்ளிரவில் குளத்தில் மூழ்கிவிட முயல்வதை பார்த்த அவர்கள் அவளிடம் அறிவுரை கூறி அவளது முயற்சியைக் கைவிடச் செய்தனர். அவள் தன் நோயின் துன்பம் காரணமாக அவ்வாறு தற்கொலையில் ஈடுபடத் துணிந்தாள்.


சித்தர் தாம் பிறப்பெடுத்ததன் குறிக்கோள் முடிவுற்றதால் இவ்வுலகை விட்டு நீங்க உறுதிபூண்டார். அவர் சமாதி அடைவதற்கு சில மாதங்கள் முன்பாக அவரது பக்தர் திரு. N. இரத்தினசபாபதி பிள்ளை தம் பணியிடம் செல்லவேண்டி இருந்ததால் சுரைக்காய் சித்தரிடம் விடை பெறச் சென்றபோது மறுபடியும் இவரை சந்திக்கும் பேறு எப்போது கிட்டுமோ என்று எண்ணினார். அப்போது சித்தர் ”சித்திரத்தே குத்தி அப்புறத்தே வைத்திருக்கிறதே! அதைப் பார்த்துக் கொள்வது தானே என்று அங்கே மாட்டியிருந்த தம் புகைப்படத்தைக் காட்டினார். இதுவே இரத்தின சபாபதியுடனான இறுதிச் சந்திப்பு என்பதைத் தான் அவர் மறைமுகமாகச் சுட்டினார். 


இவரது இறும்பூதுச் செயல்கள்:


ஒருபோது ஒரு கிழவி தன் பேத்தியை அழைத்து வந்து சித்தரிடம் காண்பித்தாள். நெடுநாள் காய்ச்சலால் அப்பேத்தி உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக ஆகிப்போயிருந்தாள். மருத்துவர் நோய் இன்னது என்று அறியாதவராக கைவிட்டிருந்தனர். சுரைக்காய்ச் சித்தர் அந்நோயாளி மேல் இரக்கங்கொண்டு அவளை ஆசிர்வதித்துத் தரையில் இருந்த மண்ணை எடுத்துக் கொடுத்து அப்பெண்ணுக்கு மருந்தாக அளிக்கச் செய்தார். அவ்வாறு செய்த சின்னாட்களிலேயே அந்நோய் அகன்றது. ஒரே மாதத்தில் அவள் நல்ல உடல்நிலையைப் பெற்றாள்.


ஒருபோது வண்ணான் ஒருவன் ராசபிளவை நோயினால் அளவிலாத் துன்பமுற்று சுரைக்காய்ச் சித்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். சித்தர் அவனை ஆசிர்வதித்துக் கழுத்திலும் முதுகிலும் உள்ள பிளவையில் புளியை அரைத்து தடவினால் ஆறிவிடும் என்று சொல்லி அனுப்பினார். அவர் மேல் நம்பிக்கைகொண்டு அவ்வாறே செய்த வண்ணான் இரு வாரங்களில் அந்நோயிலிருந்து விடுபாடு கண்டான்.


1902 இல் ஆகத்து மாதத்தில் சுரைக்கைச் சித்தர் கடைசி முறையாகச் சென்னை வந்தார். ஒரு வாரம் அங்கு தங்கிவிட்டு ‘வெற்றி கண்டாகிவிட்டது’ இனி ஒரு நொடியும் தாழ்த்தக் கூடாது என்று சொல்லி வழக்கமாக அவருடன் இருப்போரை எல்லாம் சென்னையிலேயே விட்டுவிட்டு திரு. புருசோத்தம நாயுடுவுடன் நாராயணவரத்திற்கு புறப்பட்டு இரவே புத்தூர் சென்றடைந்து அங்கு இரவு தங்கினார்.


அடுத்தநாள் சித்தர் அங்கிருந்து ஒரு பசனை கூட்டத்துடன் புறப்பட்டார். உள்ளத்தை உருக்கும் பாடலைப் பாடிக்கொண்டும், இறைவனை நெஞ்சார வழிபட்டு கொண்டும், இறைவனுக்கு நன்றி தெரிவித்தும் அவர் எழுப்பிய இன்னிசை கேட்பவர்கள் காதில் தேனாய் ஒலித்தது. நாராயணவரம் சென்றடைந்ததும் புருசோத்தம நாயுடு, பாப்பைய்ய செட்டி ஆகியோரிடம் ‘நான் நாளை மறுநாள் என்னுடைய ஊருக்குப் போகிறேன்’ என்றார்.  அன்று இரவு தம் தாகத்தைத் தணிக்க 10 படி தண்ணீர் குடித்தார். ஆனாலும் மலம் ஏதும் கழிக்கவில்லை.


மறுநாள் அவரது வேண்டுகோளின்படி புருசோத்தம நாயுடு 150 குடங்கள் தண்ணீர் கொண்டுவந்து அவர்மேல் ஊற்றினார். அப்போது நள்ளிரவு 12 மணி. சித்தர் வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு புருசோத்தம நாயுடுவிடம் தேங்காயும் கற்பூரமும் இல்லையா? என்று கேட்டார். நாயுடு பாப்பய்யச் செட்டியிடம் சென்று சித்தர் விரைந்து உலக வாழ்வைவிட்டு நீங்கிவிடுவார் என்று தாம் அஞ்சுவதாக சொல்லி தேங்காயும் கற்பூரமும் கொடுக்கும்படி வேண்டினார்.


செட்டியும் அவற்றைக் கொடுத்தார். ஆனால் சித்தர் நாயுடுவிடம் தாம் மறுநாள் பகல் பன்னிரண்டு மணிக்கு உயிர் நீப்பதாக சைகை காட்டினார். சித்தர் வாய்திறவாது அனைப்புக்கை (அபயஸ்தம்) காட்டி தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றுமாறு குறிப்பிட்டார். அவ்வாறு செய்ததும் சித்தர் புருசோத்தம நாயுடுவின் மேல் மெதுவாகச் சாய்ந்தார்.


அப்படியே இறைவனோடு ஒன்றிவிட்டார். அடுத்தநாள் அவர் ஏற்கெனவே வழியில் வளர்ந்து இருந்த நாகதாளிச் செடிகளை அகற்றி அங்கிருந்த குழிகளில் குழாங்கற்களையும் மணலையும் நிரப்பிச் சீர்திருத்தி வைத்திருந்த நிலவெளியில் அவரது மெய்யுடல் சமாதி வைக்கப்பட்டது. இச்செய்தி கேட்டு அவரது அடியார்கள் பெருந்துயர் எய்தினர். பின்பு சமாதி வைக்கப்பட்ட இடம் கோவிலாக கட்டி எழுப்பப்பட்டது. மேற்சொன்ன யாவும் செங்கல்வராய முதலியார் நினைவுகளின் பதிவுகள்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


puthur sithargal, mahans in puthur , puthur siddhargal , jeeva samadhi in puthur , puthur siddhar , siddhar temple in puthur , puthur siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in puthur , siddhar jeeva samadhi temples in tamil nadu , 

No comments:

Post a Comment